Wednesday, 30 October 2013

தீபாவளி



    அப்போதெல்லாம் கிட்டத்தட்ட இரண்டுமாதங்களாக காத்திருப்போம் தீபாவளிக்காக. ஒவ்வொரு நாளாக கவுண்டவுனில் குறையும். என்ன என்ன பட்டாசுகள் வாங்கவேண்டும் என ஒரு பெரிய பட்டியல் தயாரிப்போம்.

    சீனி வெடி, ஊசி வெடி, அணுகுண்டு, ஏரொப்ளேன், சங்குசக்கரம், புஸ்வாணம், மத்தாப்பு, வெடி மத்தாப்பு,சாட்டை, பென்சில், சணல்வெடி, குருவி வெடி, லக்ஷ்மி வெடி, பாம்பு மாத்திரை, கலர் கல், பொட்டுவெடி, சுருள்கேப், துப்பாக்கி என பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஒவ்வொன்றிலும் எத்தனை வேண்டும் என கணக்கெடுப்போம். தீபாவளிக்கு பத்து பதினைந்து நாட்கள் இருக்கும் போது பட்டாசு வந்துவிடும். சிதம்பரத்திற்கு சென்று அப்பா வாங்கி வருவார்கள். நேரம் நெருங்க நெருங்க சந்தோஷத்தில் நெஞ்சு படபடக்கும். கண்கள் மின்ன பட்டாசுப் பொட்டலத்தை பிரிப்போம். சில வெடிகள் கிடைத்திருக்காது, சிலவை எதிர்பாராமல் கிடைத்திருக்கும். இதற்கிடையில் என் தாய்மாமா வேறு பட்டாசு வாங்கி
வருவார்கள்.எவ்வளவுதான் வாங்கி வந்திருந்தாலும் குறைவாகவே தோன்றும்.

    எல்லாவற்றையும் ஒரு ஈச்சந்தட்டில் பரப்பி வெயிலில் காயவைப்போம். நிறைய நாட்கள் ஐப்பசியில் மழை என்பதால் வெய்யிலே இருக்காது. அந்த நாட்களில் இரவு படுக்கும்போது மண் அடுப்பைச்சுற்றி காயவைப்பதுண்டு. பகல் முழுவதும் எரிவதால் இரவு நெருப்பை அணைத்தபின்னரும் நன்றாக சூடு இருக்கும். நடு இரவில் தூக்கத்திலிருந்து எழும்போது அடுப்படிக்கு வந்து தோசையை திருப்பி போடுவதுபோல் வெடிகளை திருப்பிவைப்போம்.

    அப்படி இப்படியென்று வந்தே விடும்.

    நாளை தீபாவளி என்றால் இன்றுஇரவு சிவராத்திரிதான். தூக்கமே வராது. எப்பொழுது விடியும் என காத்திருந்து காத்திருந்து எப்படியோ தூங்கிவிடுவோம். வீட்டுப்பெண்களுக்கு இரவு நெடுநேரம்வரை வேலை இருக்கும். இட்லி,வடைக்கு மாவு அரைத்தல், சுழியன், பால்பலகாரத்திற்கு தயார் பண்ணுவது என்று ஓய்வில்லாமல் வேலை செய்துகொண்டிருப்பார்கள். நாளைக்கு காலை நான்கு மணிக்கெல்லம்

எழுப்பிவிடவேண்டுமென கட்டளை போட்டுவிட்டுத்தான் படுக்கச்செல்வோம். அப்புறம், யார்தான் ஊரில் முதல் வெடியை வெடிப்பதாம்?

    நான்கு மணிக்கு என்னை எழுப்பிவிடும்போதே வடை, சுழியன் வாசம் மூக்கை துளைக்கும். அவசர அவசரமாக ஆயா இல்லை அப்பா கையால் எண்ணை தேய்த்துக்கொண்டு குளித்து ரத கஜ துரக பதாதிகளோடு போருக்கு தயாராவோம். வாணலியிலிருந்து வடையை குத்தி எடுக்கும் ஒரு கம்பி இருக்கும். அதுதான் எனது முதல் ஆயுதம்.

    சீனி வெடி என்று சொல்வோம். செங்கோட்டை படம் போட்ட சிவப்பு சரவெடிகள். அவைபோன்று உதிரிகளாகவும் பாக்கெட்டில் கிடைக்கும். ஒவ்வொன்றாக எடுத்து வடைகம்பியின் பின்புறம் குத்தி விளக்கில் காட்டி வெடிப்போம். ஒரு ஐம்பது வெடி வீரர்களை கொன்று குவித்துவிட்டு சாமி கும்பிடச்செல்வோம்.

    நாள் முழுக்க வெடிகளும், தின்பண்டங்களும் தான்.

வெங்காயவெடி என்று உண்டு. பூண்டு வெடி என்றும் சொல்வார்கள். கற்களுகிடையில் கந்தகப்பொடியை நிரப்பி வண்ணக்காகிதத்தால் முடிச்சிட்டு பார்க்க வெங்காயம்,பூண்டு மாதிரியே இருக்கும். இப்போது அதெல்லாம் கிடைகிறதா,தெரியவில்லை. ஓங்கி தரையில் அடித்தால் சத்தம் கேட்கும். அதை கொஞ்சம் அள்ளி கால்சட்டைப்பையில் போட்டுக்கொண்டு ஊர்சுத்துவோம். கதவுக்கு பின்னே மறைந்துகொண்டு யாராவது வரும்போது இந்த வெடியை வெடித்து கலவரப்படுத்துவதுண்டு.

    பொட்டு வெடி வெடிக்க துப்பாக்கியைத்தவிற நாங்களாக தயாரிக்கும் ஆயுதங்களும் உண்டு. இரண்டு வாஷர்களை ஒரு போல்ட்டில் சொருகி நட்டு திருகி அதில் கம்பியால் ஒரு கைப்பிடி செய்து, இரண்டு வாஷர்களுக்கு நடுவில் பொட்டுவெடிகளை அடுக்கி, நட்டைத்திருகி ஓங்கி அடித்தால் ஒரு சீனி வெடிக்குச்சமம். இதே டெக்னாலஜியில் ராக்கெட்டும் உண்டு. ஒரு பிளாஸ்டிக் ராக்கெட்டில் இதே வாஷர் அமைப்பு இருக்கும். அதில்
பொட்டு வெடியை வைத்து உயரே தூக்கிப்போட்டால், பூகோள விசையின்
கோட்பாடுகளின்படி தலைகீழாக கீழே வந்து மோதி வெடிக்கும்.

    யார் வீட்டில் அதிக பட்டாசு காகிதக்குப்பை இருக்கு என்பதிலும் போட்டி உண்டு. இதற்காக லஷ்மி வெடியின் மேல் நிறைய காகிதங்களை சுற்றி பற்றவைப்போம்.

    வெடிக்காத வழிமுறைகள் இல்லை. கொட்டாங்குச்சியினை வெடியின் மேல் கவிழ்த்தும், ஈர மண்ணில் புதைத்து யாராவது வரும்போது பற்றவைத்தும், வத்தில் ஓரத்தில் திரியைக்கட்டி டைம் பாம் ஆகவும் ஏகப்பட்ட வழிமுறைகள் உண்டு.

    உள்நாட்டு சரக்காகிய, நாட்டு வெடி, ஓலை வெடி, சணல் வெடிகளும் உண்டு. ஒவ்வொரு நாட்டு வெடியும் ஒரு அணுகுண்டிற்குச்சமம்.

    அப்பாவின் பால்ய காலங்களில் நிறைய பொட்டு வெடிகளும், ஒரு புஸ்வாணம், ஒரு சங்குசக்கரம் தான் வாங்கித்தருவார்களாம் எனது தாத்தா.  இதைவிட பெரிய கட்டுரை எழுதுமளவிற்கு எந்து அப்பா அவர்களுடைய கதைகளைச் சொன்னார்கள்.

    பணத்தில் குறைவாயும், மகிழ்ச்சியில் நிறைவாயும் வாழ்ந்த நாட்கள் அவை.




6 comments: