இன்று வீட்டிற்குள் வந்தது. வெளிர் பச்சையும் ஆலிவ் பழுப்புமாய்,ஒரு குழந்தையாக. பிறந்து கொஞ்சநாளே ஆன, அதிக தூரம் பறக்கத்தெரியாத ஒரு அப்பாவியாய். எப்படியோ எங்கிருந்தோ பறந்து வந்து எங்களின் சமையலறைப் பரணில் உட்கார்ந்திருந்தது.
மகள் வந்து சொன்னாள்.
“அப்பா.. அப்பா.. நம்ம கிச்சன்ல ஒரு பறவை வந்திருக்கு. நானும் தாத்தாவும் அதுக்கு ஃபுட் வச்சோம். நீங்க வேணும்னா வந்து பாருங்களேன்.”
நிஜமாகவே பறவை என்றுதான் சொன்னாள். சுட்டி டிவியால் ஒரு நன்மை. சில நல்ல தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொண்டிருக்கிறாள்.எப்போதும் விளையாட்டாய், ஏதாவது கதை விடுவாள். அதைப்போலத்தான் இதுவும் என்று எண்ணி,
” என்ன? பிளாஸ்டிக் குருவியா?” எனக்கேட்டேன்.
“இல்லப்பா. நெஜமா வந்திருக்கு” என்றாள்.
கையப்பிடித்து இழுத்துச்சென்றாள். மெல்லியதாக கீச் கீச் என்று கத்திக்கொண்டு பழக்கமில்லாத இடத்தின் பயத்துடன் உட்கார்ந்திருந்தது.
சந்தோஷம், ஆச்சரியம் எல்லாம் கலந்த கலவையாய் பார்த்தேன். சென்னை வந்த இந்த பதினேழு வருடங்களில் ஒரு தேன்சிட்டை இவ்வளவு அருகில் இப்போதுதான் பார்க்கிறேன்.
அருகில் என்ன...முதன் முதலாக என்று கூட சொல்லலாம். எங்கள் கிராமத்தில் அடிக்கடி பார்க்கும் குருவிதான். கிட்டத்தட்ட எல்லார் வீட்டிலும் வாசற்படி அருகே நெற்கதிகளைக்கொண்டு கொத்தாகக்கட்டித்தொங்க விட்டிருப்பார்கள். குருவிகளுக்காகவே. அவ்வப்போது இவை வந்து நெல்மணிகளை கொறித்து விட்டு செல்லும். தின்றுவிட்டு போட்ட நெல்லின் தோல்கள் வாசற்படியில் இரைந்து கிடக்கும்.
இங்கு தட்டில் வைத்த பொட்டுக்கடலையை அது சாப்பிடவே இல்லை. பசியைவிட உயிர் தப்பித்தலே முக்கியமென நினைத்திருக்கலாம்.
வீட்டிலுள்ள அனைத்து மின்விசிறிகளையும் நிறுத்திவிட்டேன். அதற்கு வெளியே செல்லும் வழி தெரியவில்லை. எப்படியாவது பிடித்து வெளியே விட்டுவிடலாம் என்று அக்வாரிய மீன் வலையால் பிடித்தேன். இடுக்கு வழியாக பறந்து வெளியே சென்று படியில் அமர்ந்தது. அதிக தூரம் பறக்கமுடியவில்லை. மாடி கைப்பிடி சுவற்றில் அமர்ந்து கொண்டது. வேறு
எதாவது பெரிய பறவையால் இதன் உயிருக்கு ஆபத்து நேரிடும் எனக்கருதி பிடித்துவைத்து ஒரு வாரம் கழித்து விட்டுவிடலாம் என நினைத்தேன். இதை வைக்க கூடு எதுவும் இல்லை என்பதால் ஏதொ ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு மூடி வைத்து பிறகு கூண்டில் வைக்கலாம் என்று வாளி எடுக்க கீழே சென்றேன்.
மறுபடி மேலே வந்து பார்த்தபோது குருவி அங்கே இல்லை.
No comments:
Post a Comment