Friday, 25 October 2013

அது ஒரு மழைக்காலம் - 3





பள்ளி நாட்களில் மழை என்பது ஒரு குதூகலம்.

எங்களது கூரைப்பள்ளிக்கூடம். பன்னிரெண்டாவது வரை கூரை தான். ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பள்ளி. ஆறிலிருந்து பன்னிரெண்டு வரை வேறு பள்ளி. ஆரம்பப்பள்ளியில் தரையில்தான் அமரவேண்டும். ஐந்தாம் வகுப்பு வரும் போது பலகை போட்டிருப்பார்கள். உயரிநிலைப்பள்ளியில் எட்டாவதிலிருந்துதான் பெஞ்ச் போட்டிடுப்பார்கள். ஆறு, ஏழாம் வகுப்புகள் தரைதான்.

கூரை என்பதால் மழை பெய்யும்போது அங்கெ அங்கே ஒழுகும். ஒரு வகுப்பில் இரண்டு, மூன்று இடங்களிலாவது ஒழுகும்.பாதி பேருக்கு உட்கார இடம் இருக்காது. முண்டி அடித்துக்கொண்டு உட்காருவோம். சில நேரங்களில் இன்னொரு செக்‌ஷனில் போய் உட்கார சொல்வார்கள். நனைந்துவிடும் என்பதால் புத்தகத்தையோ, நோட்டையோ திறக்கமுடியாது. அதனால் ஆசிரியர்கள் பாடம் நடத்தமாட்டார்கள். வெளியில் மழை.  பாடங்கள் இல்லை. இதைவிட வேறென்ன வேண்டும் எங்களுக்கு? அங்கேதான் சந்தோஷம் ஆரம்பம்.

அந்த நேரங்களில் ஆசிரியர்களை கதை சொல்லச்சொல்வோம். நாங்களும் சொல்வோம். ஆசிரியர்கள் எங்களை யாரையாவது பாடச்சொல்வார்கள். வகுப்பில்தான் எத்தனை ’எஸ்பிபி’ க்கள், ’மனோ’க்கள். எத்தனை ’ஜானகி’கள், ’சித்ரா’க்கள். வகுப்பறையே ரெக்கார்டிங் ஸ்டுடியோ. லஞ்ச் பாக்ஸே மிருதங்கம்.

மழை தொடரும் என தெரிந்தால் அரைநாளோடு விடுமுறை விட்டுவிடுவார்கள். மழை பெய்யவேண்டுமென்பதில்லை. காலையில் வானம் இருட்டிக்கொண்டு வந்தாலே போதும். அரைநாள்தான். டிங்..டிங்..டிங்..டிங்..டிங்...... என மணி அடிக்கும் நேரம்தான் காதில் தேன் வந்து பாயும் நேரம். ஓ....... என்று கத்திக்கொண்டே ஓடும் அந்தச்சத்தம் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

வகுப்பறை மழை நாட்களில் ஈரமாக இருக்கும். நீண்ட வராண்டாக்களில்தான் வகுப்புகள் இருக்கும். மதிய உணவு இடைவேளையில் அனைத்து வகுப்புகளும் கலைந்துவிடுமென்பதால் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு ஓடிவரலாம். அப்படி ஓடி வந்து ஈர சிமெண்ட் தரையில் சட்டென பிரேக் அடித்து நிற்போம். ஏகப்பட்ட இயற்பியல் கோட்பாடுகளின் படி உடல் உடனே நிற்காது. தரையில் ஈரமென்பதால் ஐஸ் ஸ்கேட்டிங் போல பத்து பதினைந்து அடிதூரத்திற்கு வழுக்கிச்செல்வோம். எனது பால்ய நண்பன் மனோகரன் இந்த ஸ்கேட்டிங்கில் பிரபலம்.

அப்போது கிடைத்த பொருளெல்லாம் விளையாட்டுக் கருவிகள். பார்த்த இடமெல்லாம் விளையாட்டு களங்கள். இப்போதோ எல்லாமே கிடைக்கிறது. நமது குழந்தைப்பருவத்தைத் தவிர.

No comments:

Post a Comment