"ஐயோ...ஐயோ.. என் தலைல கல்ல தூக்கிப் போட்டுட்டு போய்ட்டாளே... நான் என்ன பண்ணுவேன். யாராவது ஓடியாங்களேன்.. நான் என்ன பண்ணுவேன்".
"என்ன அங்க சத்தம்..."
"என்னடி ஆச்சு... "
"பாருங்க... பாழா போனவ தூக்கு மாட்டிகிட்டா. "
"அய்யய்யோ...என்னடி கொடும இது... ஏண்டி இப்படி பண்ணின..."
"யாராவது ஆம்பளைங்க இருக்காங்களா பாருங்க வெளில...யாராவது வாங்களேன்... "
"கீழ இறக்கு மொதல்ல. பாத்து..."
"தூக்க முடியலியே.."
"இந்தா.. அப்படியே கால பிடி....மெதுவா மெதுவா..."
"டேய் டேய்.. இரு.. இரு.. அந்த ஸ்டூல நிமித்தி போட்டு மேல ஏறி பிடிச்சுக்கோ..."
"ம்ம்ம்.. மெதுவா... அப்படியே சாய்ச்சு உக்கார வைங்க..."
"மூச்சு இருக்கா பாரு..."
"இப்படி பண்ணிட்டு போயிட்டியேடி படு பாவி.. நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன்.."
"யாராவது துணி எடுத்து மூஞ்சிய தொடைங்க... நொரையா வழியுது பாரு."
"ஏய் பாப்பா.. நீ வெளில போய் வெளையாடு.... போ னு சொல்றேன்ல."
"கார் எடுத்துகிட்டு வர சொல்லுங்க... ஆஸ்பித்திரிக்கு போலாம்.."
"இனிம போயி என்ன பண்ணுறது.. அதன் போய்டுச்சே எல்லாம்.."
"ஏண்டி இப்படி பண்ணினா இவ..."
----------------------------------------------------------------------------------------
"என்ன? பயமா இருக்கா?"
"........"
"என்னாச்சு சொல்லு. இம்மாந்தூரம் வந்துட்டு பேசாம இருந்தா?"
"நான் ட்யூஷன் போயிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருப்பாங்க எங்க வீட்ல."
"ம்ம்ம். அதுக்கென்ன இப்ப.? அது தெரிஞ்சதுதான."
"எனக்கு பயமா இருக்கு."
"நீ வேணா போயிடுறியா"
"இல்ல..நான் போல."
"இதுலாம் மின்னாடியே பேசனதுதான? அப்போ தலையாட்டிட்டு இப்போ பயமாருக்குன்னா? ரிஜிஸ்டார் உக்காந்துருக்கார். வா போலாம்."
"தாலி வச்சு இருக்கியா?"
"ஆமாம். இங்க கையெழுத்து போட்ட உடனே கோயிலுக்கு போறோம்."
"அங்கலாம் வேணாம். பயமா இருக்கு. இங்கயே கட்டிக்கலாம்."
"கட்டிக்கிட்டு வீட்டுக்கு போம்போது அவுத்து வச்சுடுவியா? அப்புறம் எதுக்கு இப்படி பயந்து சாவுற?"
"தோ பாரு. ரொம்ப அலட்டாத. அவ்ளோ பயம் இருந்த இங்க ஏன் வரேன்.
பின்ன என்ன?"
"எப்படியும் முழு பரிட்ச முடியற வரைக்கும் எங்க வீட்லதான் நான் இருந்தாகணும்.அதுவரைக்கும் எப்படி தெரியாம பாத்துகறதுதான்னுதான்."
"சரி.தாலி வேணாம். கையெழுத்து மட்டும் போட்டுட்டு நீ போ.. மத்ததெல்லாம் உனக்கு பரிட்ச முடிஞ்சப்புறம் பாத்துக்கலாம்."
"ம்ம்ம்.."
"யாரு.. நீங்கதான் பொண்ணு மாப்ளையா? மாலை கூட வாங்கலியா?"
"இல்ல சார். கோயில்ல போட்டுக்கலாம் னு இருந்தோம்."
"வீட்ல யாருக்கும் தெரியாதா?"
"தெரியாது சார்."
"ஏன்மா...சாதி உட்டு சாதி மாறி கல்யாணம் பண்ணிகிறிங்க.. உங்க அப்பன் என்ன வெட்டிட போறார்.சரி சரி..இங்க கையெழுத்து போடுங்க..நீயும் இங்க போடுப்பா."
"ம்ம்ம்.. ம்ம் . நல்ல இருங்க..யாருப்பா சாட்சி கையெழுத்து?"
"இங்க போடுங்க.."
------------------------------------------------------------------------------------
"எல்லாம் அந்த கொலைகார பாவியால வந்தது....கட்டைல போக... அவனுக்கு என் பொண்ணுதான கெடைச்சா..."
"என்னாதாண்டி ஆச்சு... ஏதாவது திட்டுனியா.."
"ஆமாம் நீ வேற.. அவள போய் நோண்டி நோண்டி கேட்டு கிட்டு...ஊருக்கே தெரிஞ்சு போச்சு...அந்த கட்டையன் மவனும்,தோ மாட்டிகிட்டாளே இவளும் திருட்டு கண்ணாலம் பண்ணிகிட்டாங்க."
"அம்மாடி... யாரு...நம்ம பஞ்சாயத்து தலைவர் வீட்ல பண்ணை வேல செய்றானே அந்த கட்டையன் மவனையா சொல்றே."
"ம்ம்ம்.. அந்த தடிப்பயதான்....கெராப்பு வெட்டிகிட்டு அவன் சைக்கிள் ல சுத்தும் போதே தெரியும் இப்படி ஏதாச்சும் பண்ணுவான்னு."
"அந்த கம்னாட்டிக்கு எங்கேயிருந்து வந்துச்சு இவ்ளோ திமிரு...."
"அவன விடு.. அவன்தான் அப்படின்னா இந்த மூதேவிக்கு எங்க போச்சு புத்தி?"
"நீ வேற.. இருடி.. இவளே பொண்ண பறிகொடுத்துட்டு நிக்குறா... இப்ப போய் திட்டிகிட்டு..."
"திட்டட்டும் ஆத்தா... அவங்க சொல்றது சரிதானா...இவளுக்கு எங்க போச்சு புத்தி... நாங்க இவளுக்கு என்ன கொறை வச்சோம்...
கேட்ட துணி மணிலாம் வாங்கி குடுத்தேன்... படிக்கணும்னா .. பஸ் ஏத்தி போய் பட்டி னு அனுப்ச்சி வச்சேன்..இப்படி ஓடுகாலிய வந்து நிப்பான்னு தெரியாம போச்சே.... தெரிஞ்ச உடனே வெளக்குமாத்தால ரெண்டு போட்டேன்...கோவம் வராதா?இனிமே நான் எப்படி ஊரு மொகத்துல முழிப்பேன். என் ஊட்டுக்கு சாணி வார்ற பயலாம் என்ன மொறை சொல்லி கூப்பிடுகிட்டு வருவானுங்களே... தோட்டத்துப்பக்கம் போயிட்டு வரதுக்குள்ள இப்படி ப்பன்ணிகிட்டளே படு பாவி..
ஆயுசுக்கும் எங்கள தல நிமிர உடாம பண்ணிட்டாளே..."
"சரி.. சரி.. உடும்மா... என்னமோ நேரம்..விதி.. யாரு உயிரை யாரு புடிச்சு வைக்க முடியும்."
"அந்த பொறுக்கி பரதேசிய கொன்னாதான் என் கோவம் தீரும்.."
"அட.. நீ வேறப்பா... அவன கொன்னாக்கா உன் மொவ வந்துடுவாளா?... ஆக வேண்டியத பாருங்க.."
"எவனோ போலீஸ் ல சொல்லிட்டான் போலருக்கு... போஸ்ட்மார்டம் பண்ணனும்குறாங்க..."
"அய்யோ ... வேணாம் சார்... முழுசா உயிரோடதான் இல்ல. முழுசா போதைக்கவாவது உடுங்க சார்."
"நான் என்னமா பண்ண முடியும்...இந்த வழியாதான் ஏசி போய்ருகாரு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. அவருதான் என்ன அனுப்பினாரு... நீங்க ஒண்ணும் கவலை படாதிங்க... இதெல்லாம் பார்மாலிட்டி. ரொம்ப ஒண்ணும் சேதம் இல்லாம பாத்துக்கலாம். கொஞ்சம் காசு செலவு பண்ணினா கேசு ஏதும் இல்லாம பண்ணிடலாம். தவறி உழுந்துதான் செத்து போச்சுன்னு எழுதி குடுத்துடுவார். எனக்கு தெரிஞ்சவர் தான்..பாத்துக்கலாம். அந்த சைடு ஆளுங்கள நான் பாத்துகறேன்.."
----------------------------------------------------------------------------------------
அதற்கப்புறம் எல்லா செயல்களுமே இயல்பாகத்தான் நடந்தது...தீயின் கோர பிடியில் அவளது தேகம் போசுங்கிக்கொண்டிருந்தது..அவளது தந்தையின் கண்களில் இருந்த வெறுமைக்கு மட்டுமே தெரியும் அந்த உண்மை...
அது தற்கொலையல்ல என்பது..
(என்றோ எழுதியது... ஒரு மீள்பதிவு...)