Monday, 16 December 2013

மார்கழிப்பூவே.....

 
 

அதிகாலை நான்கு மணிகெல்லாம் எங்கோ தூரத்தில் கேட்கும் அந்தப்பாடல்.
 
கற்பூர நாயகியே கனகவள்ளி....காளி மகமாயி கருமாரியம்மா...
 
மார்கழி முதல் நாள் முதல், பொங்கல் வரை தொடரும் இந்த மாரியம்மன் பாடல்கள,. ஆற்றுக்கு அந்தப்புரம் அழிசிகுடி என்ற ஊரில் ஏதோ ஒரு
கோவிலில் போடுவார்கள். மெல்லியதாக அதே நேரத்தில் தெளிவாக கேட்கும். மார்கழியையும், எல் ஆர் ஈஸ்வரியையும் பிரிக்கவே முடியாது.
 
வீட்டுப்பெண்களை கோலம் போட எழுப்புவதற்காக  சங்கு ஊதி வருவார். மூன்றரை அல்லது நான்கு மணியளவில் மணி அடித்து, சங்கு ஊதி பாட்டு
பாடிக்கொண்டு வருவார். நிறைய தெருக்களை சுற்றவேண்டுமென்பதால் சில நேரங்களில் இரவு இரண்டு மணிக்கு கூட வருவதுண்டு. வீட்டுக்கூடத்தில் நள்ளிரவில்  குளிரில் நடுங்கிக்கொண்டு போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டு பயம் கலந்த சுவாரசியத்துடன்
கேட்டுக்கொண்டிருப்போம்.
 
சற்று நேரத்தில் நான்கு நான்கரை மணியளவில்அம்மா எழுந்துவிடுவார்கள். தெரு பெருக்கி சாணி தெளித்து கோலம் போட செல்வார்கள். நாங்கள்
அம்மாவிற்கு துணை.அம்மாவின் கலையார்வம் விரலிடுக்கின் வழியாக கோலமாக உருப்பெரும். பூக்கோலம், சிக்குக்கோலம் என பல வகை
உண்டு. எல்லார் வீடுகளிலும் தெருவடைத்து கோலம் போடுவார்கள். அங்கே அறிவிக்கப்படாத ஒரு போட்டி இருக்கும். யார் வீட்டில் அழகான, பெரிய
கோலம் என்று. சந்தேகத்திற்கிடமில்லாமல் அம்மா தான் வின்னர். மாமியார் நன்றாக கோலம் போட்டால் மருமகளுக்கு போட வராது என்ற விதியை
வெற்றிகரமாக தகர்த்தெரிந்தவர் அம்மா. எங்கள் ஆயா மிக நன்றாக போடுவார்களாம். அடுத்த தலைமுறையிலும் அதுவே தொடர்ந்தது.
 
கோலமாவில் வண்ணங்களை கலந்து கொடுப்பது எனது வேலை. காது மறைத்து தலையில் துண்டை சுற்றிக்கொண்டு குத்துக்காலிட்டு
உட்கார்ந்துகொண்டு கலர் பொடிகளை தூவிக்கொண்டிருப்போம். கோலம் முடிந்ததும் அதன் நடுவே ஒரு பூசணிப்பூ  அல்லது பரங்கிப்பூ
வைப்பார்கள். யார் வீட்டில் பூசணி, பரங்கிக்கொடிகள் இருக்கிறதோ அவர்கள் பக்கத்து வீடுகளுக்கு பூ கொடுப்பார்கள். சாணியால் பிள்ளையார்
பிடித்து அதன் மேல் பூவை வைத்தவுடன் கோலம் நிறைவு பெறும்.
பிறகு இந்தப்பூக்களை சாணி மேல்  வைத்து பொங்கல் ராட்டிகள் தட்டப்படும். தை பெரும்பொங்கலன்று பானை பொங்கியதும் இந்த ராட்டியை
அடுப்பில் வைக்கவேண்டும்.
 
ஆறு மணிக்கு எழுந்து ஐந்து புள்ளிக்குள் இரண்டு நிமிடங்களில் போடப்பட்ட  இன்றைய எங்கள் அப்பார்ட்மெண்ட் கோலம் சொல்லும் கதைகள்
ஏராளம்.
 



2 comments:

  1. பூசணிப்பூ & பரங்கிப்பூ, இரண்டும் தான் மார்கழி கோலம் சிறப்பு...

    ReplyDelete