Saturday, 22 March 2014

சிக்கு புக்கு...சிக்கு புக்கு...


என்னுடைய முதல் ரயில் பயணம் எத்தனை வயதில் என்று சரியாய் ஞாபகமில்லை.

ஐந்து, ஆறு வயதிருக்கலாம். மூன்று, நான்காகக்கூட இருக்கலாம். குடும்ப சுற்றுலாவாக இராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாக்குமரி சென்றிருந்தோம். ரயில் பெட்டி  செங்கல் நிறத்தில் இங்கும் அங்கும் தாலாட்டியபடி சென்றுகொண்டிருந்தது. இரயிலில் ஒருநாள் எனக்கு காய்ச்சல் என்று கூட ஞாபகம்.

அந்த வயதிலேயே இரயில் என்னை முழுதாக ஆக்கிரமித்தது. எல்லாரையும் போலவா?, இல்லை எனக்கு மட்டுமா தெரியவில்லை அந்த பிரமிப்பு. ஒரு ராட்சசன் போல்  ”பாங்க்க்க்க்க்க்” என கத்திக்கொண்டு ஒவ்வொரு முறை கடந்து செல்லும்போதும் நான் துள்ளிக்குதித்திருக்கிறேன்.


மலையும் மலை சார்ந்த பகுதி, காடும் காடுசார்ந்த பகுதியும் போல எனது சிறுவயது ஆச்சரியங்கள் இரயிலும் இரயில் சார்ந்த பகுதியும் என ஆயிற்று. தண்டவாளங்கள், இரயில் நிலையம், நடைமேடை, இரும்பு சக்கரங்களில் ’கடக்’ ’கடக்’ என இழுத்துச்செல்லப்பட்டு பொருட்களை எடுத்துச்செல்லும் வண்டிகள், புத்தகக்கடை, டீக்கடை, சிவப்பு, பச்சை கொடிகள், விளக்குகள், நிலையத்தில் நிற்காமல் செல்லும் போது கூட எஞ்சினிலிருந்து கைமாறும் வளையங்கள், விசில் சத்தம் மற்றும் ரயிலின் வருகையை ஒட்டி நிலையத்தில் அடிக்கப்படும் தண்டவாள மணிச்சத்தம், வெள்ளை உடை அணிந்து கொடி அசைத்து செல்லும் கடைசிப்பெட்டி என என் சுவாரசியங்களுக்கு பஞ்சமே இருந்ததில்லை.

தண்டவாளத்தில் இடையில் காந்தம் கிடைக்கும் என யாரோ சொல்லியதை நம்பி அதை கடக்கும் போதெல்லாம் தேடிப்பார்த்திருக்கிறேன். தண்டவாளத்தில் காதை வைத்து தூரத்தில் இரயில் வரும் சத்தம் கேட்கிறதா என பார்த்திருக்கிறேன்.

இரண்டு நிமிடங்கள் தான் நிற்கும் என்பதால் தூரத்தில் இரயில் வரும்போதே பரபரப்பாகி,  வந்தவுடன் அடித்துப்பிடித்து ஏறி அமருவது படபடப்புடன் கூடிய மகிழ்ச்சியான தருணங்கள்.

டக் டக் என சத்தமிழைத்து ஓடும் மின்விசிறி, வேகமாக பின்னோக்கி ஓடும் மரங்கள், வழியெங்கும் டாட்டா காண்பிக்கும் சிறுவர்கள், பாலத்தில் செல்லும்போது சுருதி மாறி ஒலிக்கும் சத்தம் என சொல்லிக்கொண்டே போகலாம்.இரயிலின் ஓட்டுனர் என்னைப்பொருத்தவரை ஒரு சூப்பர்மேன். ஒற்றைஆளின் உள்ளங்கைக்கு பணிந்து ஊரையே இழுத்துச்செல்லும் இரும்பு ராட்சசன். ஒரு பிரமாண்டமான இயந்திரம் இப்படித்தான் இருக்கும் என்பதன் முதல் சாட்சியாக இரயில் இஞ்சின் இருந்தது. பின்னாளில் வந்த டீசல் இஞ்சின்கள் முந்தைய நீராவி எஞ்சின் அளவுக்கு கவரவில்லை எனினும் மோசமில்லை. இப்போதுள்ள மின்சார இரயில்களை பார்க்கும்போது அப்போதைய சந்தோஷங்கள் வருவதேயில்லை.

அடிக்கடி கனவிலும், நிஜத்திலும் எனக்கு வரும் எண்ணங்கள் ஒரு அடர்ந்த காட்டினுள், வளைந்து வளைந்து, குளிர்ந்த காற்று முகத்தில் அடிக்குமளவு தலையை வெளியே நீட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்லும் ஒரு பயணம்.

சென்று சேருமிடம்  பற்றி கவலை இல்லாமல் பயணமே சந்தோஷமாய் இருப்பது இரயிலில்தான். Unreserved பெட்டியின் மர இருக்கைகள் இந்த சந்தோஷத்திற்கு தடையாய் ஒருபோதும் இருந்ததில்லை.

எனக்கு ஒரு விபரீத ஆசை இருந்தது. இன்னமும் இருக்கிறது. இரண்டு பெட்டிக்கு நடுவில், எஞ்சினின் முன்னால் காற்று முகத்திலறைய நின்று கொண்டு, மற்றும் கடைசியில் தனி ஆளாக Guard இருக்கும் பெட்டி, இவற்றில் பயணம் செய்யவேண்டும் என. இதில் முதலாவது மட்டும் தான் சாத்தியமாயிற்று. ஒருமுறை டெல்லியிலிருந்து சென்னை வரும்போது நான் இருந்த பெட்டிக்கு அருகில் இருந்தது ஏ சி பெட்டி. ஏசி என்பதால் அந்தப்பெட்டிக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டிருக்கும். ஆனால் அன்று அந்த கதவு சரியாக அடைக்கப்படவில்லை. லேசாக தள்ளிப்பார்த்ததும் சற்று விலகிக்கொண்டது. என் தலையில் காதலா காதலா போல ஐடியா கொம்பு முளைத்தது. என்கூட வேறு யாரும் வரவில்லை என்பதால் அந்தக்கொம்பு நன்றாக நீண்டு வளர்ந்தது. ஆனது ஆகட்டும் என கொஞ்சம் கொஞ்சமாக அடிமேல் அடிவைத்துஇரண்டு பெட்டிகளையும் இணைக்கும் அந்த பெரிய
கொக்கியின் மேல் நின்றேன். குனிந்து பார்த்தால் கீழே தண்டவாளமும், சரளைக்கற்களும் பேய்த்தனமாக ஓடிக்கொண்டிருந்தன. ஒரு பத்து நொடிகள் இருக்கும். "சாதித்து விட்டாயடா பாரி" என்று காலரை இழுத்துவிட்டுக்கொண்டு உள்ளே வந்துவிட்டேன். இப்போது
நினைத்துப்பார்க்கும் போது உதறலாய்த்தான் இருக்கிறது. இன்னும் இரண்டு மிச்சம் இருக்கிறது....பார்க்கலாம்.

முதன் முதலில் சென்னைக்கு, தாம்பரம் சானிடோரியத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். மாமா வீட்டிலிருந்து கிண்டி வந்து பின், கிண்டியிலிருந்து தாம்பரத்திற்கு மின்சார இரயிலில் பயணம். நாங்கல் ஒரு மூன்று பேர் ஒன்றாக வருவோம்.  எங்கே ஏறினாலும் பெட்டியின் அடுத்த வாசலில் கீழே அமர்ந்துவிடுவோம். அந்தப்பக்கம் எந்த ஸ்டேஷனும் வராது. கையில் கடலை வாங்கி கொறித்துக்கொண்டே மறுபுறத்தில் காலை தொங்க விட்டுக்கொள்வோம். விரைந்துசெல்லும் இரயிலில் காலை தொங்கவிட்டுக்கொண்டு வருவதற்கு ஒரு முரட்டுத்தனமான முட்டாள்தனமும், ஒரு குருட்டுத்தனமான புத்திசாலித்தனமும் அப்போதே இருந்தது. பழவந்தாங்கலுக்கு அருகில் ஓரிடத்தில் மட்டும் இடிக்குமென்பதால் ஜாக்கிரதையாக அங்கே காலை தூக்கிக்கொள்வோம்.

இப்போது கூட இரயின் சந்தோஷங்களும், சுவாரசியங்களும் எனக்கு அலுத்ததேயில்லை. Strangers on a Train, Unstoppable, The taking of Pelham, Under siege-2, என இரயிலைப்பற்றிய படம் என்றால்கூட எனக்குக்கொண்டாட்டம் தான்.

அதனால் மக்களே, அடுத்தமுறை எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போது கூடவே ஒரு இரயிலையும் பரிசாக கொடுத்துவிடுங்கள். இல்லையேல் இந்தக்கட்டுரைக்கு இரண்டாம் பாகம் எழுதிவிடுவேன் என எச்சரிக்கிறேன்.