Friday, 14 February 2014

அஞ்சலி

நான் முதன் முதலில் அவரை பார்க்கச்சென்ற போது, அவரது அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். அப்போதுதான் சாப்பிட்டு முடிந்திருந்தார்.

”வாங்க.. உக்காருங்க..” என்றார், மிக மெதுவான தொனியில்.


தயங்கித்தயங்கி அவரது முன்பாக அமர்ந்தேன். சுற்றிலும் புத்தகங்கள் இருந்தன. ஒரு பக்கத்தில் ஒரு அலமாரி முழுக்க திரைப்பட டிவிடிக்கள். தட்டும், டம்ளரும் மேஜையின் ஓரத்தில் இருந்தது. ஒரு சின்ன சத்தம் கூட இல்லை.

”ஒரு நிமிடம்”  எனச்சொல்லிவிட்டு தட்டை வைத்துவிட்டு வர எழுந்தார். 

“குடுங்க சார். நான் வச்சுடறேன் “ என்றேன். 

“இல்லை. பரவாயில்லை” என்று சொல்லி அவரே மெதுவாக தள்ளாடி எழுந்து சென்று வைத்துவிட்டு வந்தார்.எத்தனைதான் வயதாகி விட்டாலும் சிங்கம், பூனையாகி விடுவதில்லை.

நான் ஓவியத்தை முழுநேரத்தொழிலாக எடுத்துகொள்ளலாம் என நினைத்தபோது, எனக்குப்பிடித்த, என்னை பாதித்த ஆளுமைகளை வ்ரைந்து, அவர்களை நேரில் சந்தித்து கொடுக்கவேண்டும் முடிவெடுத்தேன்.அப்போது முதலில் தோன்றியது, இளையராஜா, பாலுமகேந்திரா, இயக்குனர் மகேந்திரன். இவர்களையெல்லாம் சந்திக்க முடியுமா என யோசிக்கவேயில்லை. பாலுமகேந்திராவின் ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் உண்டு.  அந்தப்படத்தை எடுத்து வரையத்தொடங்கினேன்.அவரின் எந்த ஒரு புகைப்படத்தைப் பார்த்தாலும் அது ஒரு புகைப்படம் என்பதைத்தாண்டி இயல்பாகவே அவரின் ஆளுமையையும், உணர்ச்சிகளையும் உள்ளடக்கியதாகவே இருக்கும். இப்படி இருக்கவேண்டும் 
என நினைத்து எதுவும் எடுக்கப்பட்டதல்ல. அவருக்கே தெரியாமல் இயல்பாக 
எடுக்கப்பட்டவைதான். அதனால்தான் அத்தனை அருமையாய் இருக்கும்.  
சினிமா உலகத்தில் இருக்கும் என்னுடைய ஒரு நண்பருக்கு பாலுவின் 
மேனேஜரைத்தெரியும். அவரின் மூலமாக சந்திக்க நேரம் வாங்கிக்கொண்டு அவரது ’சினிமா பட்டறை’ அலுவலகத்திற்கு சென்றேன்.

”சொல்லுங்க” என்றார்.

என்னை பாதித்த, நான் மதிக்கும் ஆளுமைகளை சந்தித்து அவர்களுடைய பங்களிப்பிற்காக என்னுடைய நன்றியை தெரிவிப்பதற்காகவே வந்ததாக சொன்னேன். நான் வரைந்த ஓவியத்தை தந்தேன். 

”ரொம்ப நல்லாயிருக்கு” என்றார். 

அவருடைய அந்த அலுவலகமும், சினிமா பட்டறையுமாகிய அந்த இடம் அவருடைய  ’வீடு’ படத்திற்காக கட்டப்பட்டதாக சொன்னார். அவருடைய வீடு, சந்தியாராகம் படங்களின் ஒரிஜினல் நெகடிவ்கள் இப்போது இல்லை என வருத்தப்பட்டார். மேலும் சிறிது நேரம் பேசிய பிறகு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என எனது சிறிய Pont and Shoot கேமராவை  எடுத்தேன். அவரது உதவியாளரை கூப்பிட்டு SLR Camera வை கொண்டுவரச்சொன்னார். 

எனது சில்லியான, குழந்தைத்தனமான, புத்திசாலித்தனமான ஆசையை அவரிடம் சொன்னேன். என்னை ஒரு புகைப்படம் எடுத்துத்தரச்சொல்லி. 

தந்தார். 


எத்தனையோ விருதுகளைப்பெற்ற அந்தக்கை, என்னையும் புகைப்படம் எடுத்தது. 

அந்தக்கணத்தை வார்த்தைகளில் சொல்வது கடினம்.

’அடிபெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ இந்தப்பாடல் தரும் குதூகலம் அந்த பெண்ணைப்போலவே நமக்கும் தொற்றிக்கொள்ளும். ஷோபாவை இத்தனை அழகாய் யாரும் காட்டியதில்லை. வேண்டுமானால் இன்னொரு முறை you tubeல் பாருங்கள்.




மூன்றாம் பிறை வந்தபோது எனக்கு எட்டு வயது. எங்கே பார்த்தேன் என நினைவில்லை. அப்போது படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது வில்லன் நடராஜ் வரும் காட்சிகள் இனம் புரியா ஒரு திகிலை ஏற்படுத்தியது. படம் முடிந்து வெளியே வந்ததிலிருந்து, கிளைமேக்ஸ் காட்சி ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தும், சோகத்திலிருந்தும் இன்றுவரை என்னால் வெளியே 
வரமுடிந்ததில்லை. கமலுக்கு கிடைத்த முதல் தேசிய விருது. 
எனக்கு இன்றும் கமல் மீது கோபம் உண்டு. கமலால் ஒரு கோடி பணத்தைக்கூடவா இவருக்காக செலவு செய்ய முடியாது. ஒரு கோடி வேண்டாம். ஐம்பது லட்சம்?   ஐம்பது லட்சத்தில் கூட பாலுவால் படம் எடுத்திருக்க முடியும். படம் ஒரு பைசா கூட லாபம் தராமல்தான் போகட்டுமே.

கமல் பாலுமகேந்திராவை வைத்தும் ரஜினி மகேந்திரனை வைத்தும் படங்களை தயாரித்திருக்கவேண்டும். இது நன்றியோ,உதவியோ இல்லை. அவர்களது கடமை. அந்த விஷயத்தில் சசிகுமார் புண்ணியம் கட்டிக்கொண்டார்.

பாலுமகேந்திரா என்ற ஆலமரத்தில் வந்தமர்ந்து இளைப்பாறி சென்ற பறவைகள் ஏராளம். 

அவரின் சீடர்கள் விதைகளாய், விழுதுகளாய், வேர்களாய், வெளிச்சங்களாய் எப்போதும் இருப்பார்கள். 

உயிரோடு இருப்பதுவா வாழ்க்கை? அல்லது உயிர்மட்டும் போவதுதான் இறப்பா?